நேபாளம் செல்ல கூடங்குளம் சுப. உதயகுமாருக்கு தடை!!
டெல்லி: நேபாளம் செல்ல கூடங்குளம் அணு உலை போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாருக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிக்கும் கருத்தரங்கை டெல்லியில் நடத்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக, மனித உரிமை ஆர்வலர்கள் திட்டமிட்டனர். இக்கருத்தரங்கை டெல்லியில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டனர்.
ஆனால், அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் புதன்கிழமை மட்டும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த மனித உரிமை ஆர்வலர்கள் முடிவு செய்தனர். இதில் பங்கேற்க தமிழகத்தில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராட்டங்களை வழிநடத்தி வரும் சுப. உதயகுமார் அழைக்கப்பட்டிருந்தார்.

டெல்லியில் உதயகுமார்
இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று காலையில் உதயகுமார் டெல்லி வந்தார். இதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காத்மாண்டுக்கு பிற்பகல் 3 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்துக்குரிய பயணச்சீட்டுடன் அவர் சென்றார்.

விமான நிலையத்தில்..
இந்தியாவில் இருந்து நேபாளம் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என்பதால், தனது அடையாள ஆவணமாக வாக்காளர் அட்டையை விமான நிலையக் குடியுரிமை அதிகாரிகளிடம் அவர் காட்டினார்.

விசாரணை
இதற்கிடையே, உதயகுமாரின் வருகை தொடர்பாக டெல்லி காவல் துறையின் எஃப்ஆர்ஆர்ஓ (வெளிநாட்டினர் பதிவு அலுவலகம்) பிரிவினருக்கு உளவுத் துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து, அவர்களும் அங்கு சென்று உதயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

வெளிநாடு செல்ல முடியாது
அப்போது, உங்கள் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உங்கள் பாஸ்போர்ட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரிடம் பேசிய பிறகு உங்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என முடிவு செய்வோம்' என்று கூறி உதயகுமாரை அழைத்துச் சென்றனர்.

எஸ்.பி. கருத்து
இதையடுத்து திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். நரேந்திரன் நாயரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் கேட்ட போது, உதயகுமாரை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

நேபாளம் செல்ல தடை
இந்நிலையில் உதயகுமார் பயணம் செய்ய வேண்டிய விமானம் காத்மாண்டு புறப்பட்டுச் சென்றது. அதன் பிறகும் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, உங்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இல்லை' என்று கூறி மாலை 6 மணிக்கு மேல் அதிகாரிகள் விடுவித்தனர்.

கண்டனம்
இது குறித்து கூடங்குளம் அணுஉலை போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்களும் அணுஉலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்துக்கு விளக்குவதற்காக உதயகுமார் காத்மாண்டு செல்லவிருந்தார்.ஆனால், அவரை ஜனநாயகத்துக்கு விரோதமாக மாநில அரசின் தூண்டுதலால் மத்திய அரசும், டெல்லி காவல் துறையும் தடுத்து வைத்துள்ளது. இந்தநடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

ராகுலை சந்திக்கிறார்
இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, கூடங்குளத்தில் மூன்றாவது அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கோர உதயகுமார் திட்டமிட்டுள்ளார். மேலும், இதே விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்திக்க உதயகுமார் நேரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications