ஆந்திராவின் பாப்லோ எஸ்கோபார் ஜெகன்தான்.. ஒரே போடாக போட்ட சந்திரபாபு நாயுடு! ஏன் அப்படி சொன்னாரு?
அமராவதி: கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாருடன் ஒப்பிடக்கூடிய ஒரே நபர் ஜெகன்மோகன் ரெட்டிதான் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருக்கிறார்.
ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டிலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் கடத்தல மன்னன் பாப்லோ எஸ்கோபருடன் ஒப்பிட்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் அவர் பேசியதாவது, "நாட்டில் மூத்த அரசியல்வாதிகளில் நானும் ஒருவன். ஆனால் ஜெகன் காலத்தில் ஆந்திராவில் நடந்த கொடுமையை நான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. ஆந்திராவில் நடந்த சம்பவங்களை ஒரேயொருவடன் ஒப்பிடமுடியும் எனில் அது போதைப்பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபாராகத்தான் இருக்க முடியும்.
பாப்லோ எஸ்கோபர் ஒரு கொலம்பிய போதைப்பொருள் மன்னன், போதைப்பொருள் பயங்கரவாதி. அவர் அரசியல்வாதியாக மாறிய பின்னர் போதைப்பொருள் விற்பனையை தொடங்கினார். இப்படியாக சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார். இப்போதைய மதிப்பில் அது 90 பில்லியன் டாலருக்கு சமம். இருப்பினும் கடந்த 1976ல் பாப்லோ கைது செய்யப்பட்டார். 1980ம் ஆண்டு அவர் உலகின் நம்பர் ஒன் பணக்கார போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்பட்டிருந்தார்.
போதைப்பொருள் விற்பதன் மூலம் ஒருவர் பணக்காரராக முடியும். அப்படியெனில் ஜெகன் மோகனின் நோக்கம் என்ன? டாடா, ரிலையன்ஸ், அம்பானியிடம் பணம் இருக்கிறது. அவர்களை விட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஜெகன் ஆசைப்பட்டார். ஒவ்வொரும் வித்தியாசமானவர், சிலருக்கு தேவைகள், சிலருக்கு பேராசை, சிலருக்கு வெறி. இவர்கள்தான் இப்படியான விஷயங்களை செய்வார்கள்.
ஜெகன் ஆட்சியில் ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்போது ஆந்திரப் பிரதேசம் நாட்டின் 'கஞ்சா தலைநகரமாக' மாறியிருந்தது. ஆந்திராவின் ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது கஞ்சா எளிதில் கிடைக்கிறது. ஆனால் இதையெல்லாம் அவர் தனது ஆட்சியின்போது கூறினாரா?
இளைஞர்களின் குடும்பங்களை அழிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தவும், ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications