என்கவுண்டர்: 5 தமிழர்களின் உடல்களை மறு போஸ்ட்மார்ட்டம் செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திர என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் மீதமுள்ள 5 பேரின் உடல்களையும் மீண்டும் போஸ்ட் மார்ட்டம் செய்யுமாறு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கடந்த 6ம் தேதி தமிழர்கள் 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்காப்புக்காக நடந்த என்கவுண்டர் என ஆந்திர போலீசார் கூறினாலும், இது திட்டமிடப்பட்ட படுகொலை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய 3 தொழிலாளர்கள் டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் நேரடி சாட்சியம் அளித்துள்ளனர்.

இதற்கிடையே, என்கவுண்டரில் பலியான சசிகுமார் என்பவரது மனைவி முனியம்மாள், தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே அவரது உடலை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் நேற்று சசிகுமாரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். ஹைதராபாத் நிஜாம் முருத்துவக் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் இந்த மறு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்றும், 20ம் தேதிக்கு முன்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மற்ற 5 பேரின் குடும்பத்தினரில் கோரிக்கை விடுக்காததால் அவர்களது உடலை பரிசோதனை செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில், மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி அவர்களின் உறவினர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் உயிரிழந்தவர்களின் உடலில் தீக்காயங்கள் மற்றும் வெட்டுக் காயங்கள் உள்ளதால் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், 5 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 12.45 மணியளவில் மனு மீதான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி, பிற்பகலில் மீண்டும் விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 5 பேரின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பிரேத பரிசோதனைக்கான போதிய உபரகணங்கள் இல்லை என நிஜாம் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications