இனி என்னை யார் குருவாயூரப்பா என்று அழைப்பார்?: கலாமின் நண்பர் கண்ணீர்
திருவனந்தபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கேரளாவில் விஞ்ஞானியாக பணியாற்றியபோது அவர் தினமும் சாப்பிட்ட ஹோட்டல் உரிமையாளர் அவரது மறைவை நினைத்து தாங்க முடியாத துயரத்தில் உள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விஞ்ஞானியாக பணியாற்றியபோது அந்த ஊரில் உள்ள குருவாயூரப்பா என்ற உணவகத்தில் தான் தினமும் சாப்பிட்டுள்ளார். அந்த ஹோட்டலின் உரிமையாளரான பரமேஷ்வரன் நாயர்(85) தனது நண்பர் கலாமின் மறைவு பற்றிய செய்தி அறிந்து தாங்க முடியாத துயரம் அடைந்தார்.
கலாம் குடியரசுத் தலைவரான பிறகு கேரளா வந்தபோது அவரின் செயலாளர் பரமேஷ்வரன் நாயரை தொடர்பு கொண்டு கலாம் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு கலாம் எப்பொழுது எல்லாம் கேரளா வந்தாலும் அப்பொழுது எல்லாம் நாயர் அவரை சந்தித்துள்ளார்.
இது குறித்து நாயர் கூறுகையில்,

சாப்பாடு
கலாம் விஞ்ஞானியாக பணியாற்றியபோது எப்போதும் பரபரப்பாகவே இருப்பார். காலையில் ஹோட்டலுக்கு வந்து ஆப்பம், பால் சாப்பிடுவார். ஆனால் ஒரு நாள் கூட உட்கார்ந்து நிதானமாக சுவைத்து அவர் சாப்பிட்டது இல்லை. தினமும் அவசரகோலத்தில் சாப்பாட்டை விழுங்கிவிட்டு செல்வார்.

கலாம்
இரவு உணவை நானே நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து தருகிறேன் என்று நான் கலாமிடம் தெரிவித்தேன். ஆனால் அவரோ வேண்டாம் வேண்டாம், கடைக்கு வந்து சாப்பிடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். அவர் இரவில் ரசம் சாதம் தான் சாப்பிடுவார்.

நல்ல மனிதர்
அவர் எப்பொழுதும் பரபரப்பாகவே இருப்பார். கலாம் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை ஆனால் அவர் சிறந்த மனிதர் என்று நான் அனைவரிடமும் தெரிவித்துள்ளேன்.

சந்திப்பு
கலாம் குடியரசுத் தலைவரான பிறகு பலநேரம் பாதுகாப்பு அதிகாரிகள் என்னை அவர் அருகே செல்லவிட மாட்டார்கள். நான் கலாம் கண்ணில் படுமாறு நிற்பேன். உடனே அவர் என்னை அழைத்து பேசுவார். இது போன்று நான் அவரை 20 முறை சந்தித்துள்ளேன்.

குருவாயூரப்பா
கலாம் என்னை குருவாயூரப்பா என்று அழைப்பார். அவரை போன்ற நல்ல மனிதரை பார்க்க முடியாது என்று பரமேஷ்வரன் நாயர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications