இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பத்துடன் மதச்சான்றிதழ் கட்டாயமா?.. அதிகாரப்பூர்வமற்ற தகவலால் குழப்பம்
Recommended Video
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை பெறும் அகதிகள் தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது குறித்த சான்றிதழ், விண்ணப்பங்களுடன் இணைப்பது கட்டாயம் என டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் உலா வருகின்றன. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிக்கையோ, அரசாணையோ வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து போர் பதற்றத்தால் டிசம்பர் 31, 2014-க்குள் இந்தியாவில் குடியேறியிருப்போருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் இரு அவைகளிலும் நிறைவேறியது.
அது மட்டுமல்லாது அவ்வாறு குடியேறியவர்கள் இந்து, கிறிஸ்துவர்கள், சீக்கியர், புத்த மதத்தினர் , ஜெயின், பார்சி ஆகிய மதங்களை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போராட்டங்கள்
நாடு முழுவதும் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை ஐரோப்பிய யூனியனும் கண்டித்துள்ளது. அதாவது மதத்தால் மக்களை பிரிக்கும் செயல் என்பதே இந்த சட்டத்தை எதிர்ப்போரின் வாதம் ஆகும். தமிழகத்தை பொறுத்த வரை 3 நாடுகளில் இலங்கை இணைக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட மதங்களில் முஸ்லீம்கள் இணைக்கப்படவில்லை என தமிழகத்திலும் போராட்டங்கள் நடக்கின்றன.

வட்டாரங்கள்
இந்த சட்டம் அமலாகி அரசிதழில் இடம்பெற்றதை அடுத்து மேற்கண்ட 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்கள் அரசு கேட்ட ஆதாரங்களை காண்பித்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் இந்து, கிறிஸ்துவர், புத்த மதத்தினர், பார்சி, சீக்கியர் ஆகிய மதங்களை சேர்ந்தவர்கள்தான் என்பதற்கான சான்றிதழையும் சேர்த்து விண்ணப்பிப்பது கட்டாயம் என டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒரு தகவல் உலா வருகிறது. இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.

மதச் சான்றிதழ்
இது குறித்து முறையான அறிவிப்புகளோ அரசாணையோ வெளியாகவில்லை. எனினும் இந்திய குடியுரிமைக்கு 3 மாதங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலால் விண்ணப்பத்தாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மத சான்றிதழையும் சமர்ப்பிக்க கோரியதாக எழுந்த உறுதிப்படுப்படாத தகவலால் குழப்பம் நிலவி வருகிறது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் இதுகுறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

எதிர்ப்பு
அஸ்ஸாம் மாநிலத்தில் 3 மாத காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட மதங்களால் மக்களைப் பிரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மத சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications