ஜிண்டால் மருத்துவமனையில் மனைவியுடன் ட்ரீட்மெண்ட் எடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!
பெங்களூர்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூர் ஜிண்டால் மருத்துவமனையில் மனைவியுடன் மீண்டும் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனையால் அடிக்கடி சோர்வடைந்து காணப்படுகிறார். இந்த பிரச்சனைகளை போக்க அவர் முதல்வராக பதவி ஏற்றவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருமுறை பெங்களூரில் உள்ள ஜிண்டால் இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்ந்து 12 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சைக்கு பின்னர் புத்துணர்வு பெற்றவராக டெல்லி திரும்பிய அவர் சுறுசுறுப்பாக தனது பணிகளை செய்து வந்தார்.

தற்போது உடலில் மீண்டும் சேர்ந்துள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றவும், இருமல் மற்றும் நீரிழிவு தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெறவும் விரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று பிற்பகல் மீண்டும் அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். விபரம் வெளியிடப்படாத நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியான சுனிதாவும் இங்கு உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
அவர்களுக்கு ஜிண்டால் இயற்கை சிகிச்சை மைய வளாகத்தில் தனிக்குடில் ஒதுக்கப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். 10 நாட்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற திட்டமிட்டுள்ள கெஜ்ரிவால், ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் உரிமம்பெற குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து அம்மாநில ஆம் ஆத்மி கட்சி தலைமை நாளை நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications