தீக்குச்சி வெடிமருந்தில் வெடிகுண்டு... ஹரித்துவார் ரயில்களில் குண்டுவெடிப்பு : கைதான தீவிரவாதிகளின்
ஹரித்துவார்: தீக்குச்சிகளின் முனைகளில் உள்ள வெடிமருந்தைக் கொண்டு நூதன முறையில் வெடிகுண்டுகளைத் தயாரித்து அவற்றைக் கொண்டு ஹரித்வார் வரும் ரயில்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கைதான தீவிரவாதிகள் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். கைதான நால்வரும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை கைது செய்ததன் மூலம் ஹரித்துவார் கும்பமேளாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டது.
கடந்த 2ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானதளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டன. பாதுகாப்பு படையினரின் இந்த தீவிர நடவடிக்கையால், கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட மங்களூர் பகுதியில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
அக்லாக் உர்-ரகுமான், முகமது ஒசாமா, முகமது ஆசிம் ஷா மற்றும் மெரோஸ் ஆகிய அந்த 4 பேரும் புதன்கிழமையன்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர்கள் தீக்குச்சிகளின் முனைகளில் உள்ள வெடிமருந்தைக் கொண்டு நூதன முறையில் வெடிகுண்டுகளைத் தயாரிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அவர்கள் ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவை சீர்குலைப்பதற்காக, ஹரித்வார் வரும் ரயில்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
4 தீவிரவாதிகள் கைது
கைது செய்யப்பட்டு உள்ள 4 தீவிரவாதிகளும், இணையதளம் வாயிலாக சந்தேகத்துக்கிடமான செயல்களில் ஈடுபட்டது, கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டதாக டெல்லி உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பட்டதாரிகளான அவர்கள் நால்வரும், ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு இணையதளங்களை வழக்கமாக பார்வையிட்டதுடன், அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சிலருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டிருந்ததை கண்டு பிடித்த போலீசார் அவர்கள் நால்வரையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.
ரயில்களில் குண்டு வெடிப்புகள்
தலைநகர் டெல்லி, ரூர்க்கியில் இருந்து ஹரித்துவார் செல்லும் ரயில்களில், ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளா ஆகியவற்றில் குண்டு வெடிப்பு நடத்த இந்த தீவிரவாதிகள் சதி செய்திருந்தது தெரியவந்தது. உளவுத்துறை சரியான நேரத்தில் எச்சரித்ததால் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கை, உத்தரப்பிரதேச போலீசாரின் ஒத்துழைப்பால் இந்த 4 தீவிரவாதிகளை எங்களால் கைது செய்ய முடிந்தது" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ் இயக்கத்தில் சேர ஆர்வம்
ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேரும் ஆர்வத்தில் இந்த நால்வரும், தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என நால்வரும் தெரிவித்துள்ளனர். ஐஎஸ் இயக்க ஆதரவு அமைப்பான அன்சர் உத் தௌஹித் ஃபி பிலாத் அல் ஹிந்த் என்ற இயக்கத்தின் முக்கியப் பொறுப்பில் அந்த நபர் உள்ளதாகவும் அக்லக் என்பவர் கூறியுள்ளார். ஹரித்வாரில் சில நாள்களுக்கு முன்பு ஹரித்துவார் மங்ளோர் பகுதிக்கு வந்த இவர்கள் ரயிலைத் தகர்க்கும் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
குடும்ப பின்னணி
இந்தக் கும்பல் ஹரித்துவாரில் தாக்குதல் நடத்திய பிறகு குடியரசு தின விழாவின் போது, டெல்லியிலும் தாக்குதல் சதியில் ஈடுபட திட்டமிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்களின் பின்னணியில் இருப்பது யார்? இவர்களின் குடும்பப் பின்னணி போன்றவற்றை விசாரித்து வருகிறோம். நால்வரும் இளைஞர்கள் என்பதால் அவர்களின் குடும்ப விவரங்களை காவல் துறை தற்போது வெளியிட விரும்பவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய இளைஞர்கள் தீவிரம்
இந்தியாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர சமூக ஊடகங்கள் மூலம் ஆர்வம் காட்டுவதாக கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் காவல் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை தெரிவித்தார். இந்த நிலையில், அல் காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக ஒருவரையும், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் டெல்லி காவல் துறை கடந்த திங்கள்கிழமை கைது செய்தது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட நால்வரும் ஹரித்வாரில் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications