பீகார்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பட்டப்பகலில் 4 பேரை தாக்கி 17 லட்சம் “அபேஸ்”!
பாட்னா: பீகாரில் வங்கி ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், தீன்தயாள் பஜார் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இன்று காலை வழக்கம்போல் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது சுமார் 11.30 மணியளவில் ஒரு வாகனத்தில் துப்பாக்கிகளுடன் ஆறுபேர் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களில் 2 பேர் வாசலில் காவலுக்கு நின்றுகொள்ள, மீதி நான்கு பேரும் துப்பாக்கிகளால் சுட்டபடி வங்கிக்குள் நுழைந்தனர். அவர்களை கண்டதும் வங்கிக்குள் இருந்தவர்கள் பீதியில் கூச்சலிட்டபடி வெளியே ஓடத் தொடங்கினார்கள்.
இந்த அமளியை சாதகமாக்கிக் கொண்டு காசாளர் அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் உள்ளே இருந்த பணம் சுமார் 17 லட்சம் ரூபாயை ஒரு சாக்குப்பைக்குள் திணித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் வங்கி பணியாளர்கள் 3 பேர் மற்றும் வாடிக்கையாளர்களில் ஒருவர் என 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சடார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications