இடியாப்பச் சிக்கலில் இந்திய ராணுவம்.. 10,000 அதிகாரிகள் உடனடியாக தேவையாம்!
டெல்லி: இந்திய ராணுவத்திற்கு கிட்டத்தட்ட 10,000 அதிகாரிகள் தேவைப்படுகிறார்களாம். அதேசமயம், கடற்படைக்கு 1800 பேர் பற்றாக்குறையாக உள்ளனராம்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலின் விவரம்:
பாதியில் ஓய்வு பெற்ற 644 அதிகாரிகள்
கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இதுவரை 644 அதிகாரிகள் பணிக்காலம் முடிவதற்கு முன்பாகவே விருப்ப ஓய்வில் போய் விட்டனர். கடற்படையில் இது 343 அதிகாரிகளாவும், விமானப்படையில் 441 பேராகவும் இருந்தனர்.
வேறு வேலைக்குப் போகிறார்கள்
அதிகாரிகள் பற்றாக்குறைக்குப் பல காரணங்கள் உள்ளன. வேறு மாற்று வேலை காரணமாக பலர் விலகியுள்ளனர். மேலும் புதிதாக அமல்படுத்தப்பட்டு வரும் பதவி உயர்வு கொள்கையும் கூட காரணம்.
தேர்வுகளில் கடுமை
தற்போது தேர்வுகளில் கடுமையான தரம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் பணியில் பல கடுமையான விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதுவும் கூட பலர் விலக முக்கியக் காரணம்.
மருத்துவம், பல் மருத்துவம் தவிர்த்து
ராணுவத்தின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளைத் தவிர்த்து காலியாக உள்ள அதிகாரிகளின் பணியிடம் மொத்தம் 9642 ஆகும். கடற்படையில் இது 1779 ஆக உள்ளது.
பயிற்சியில் 45,000 வீரர்கள்
தற்போது ராணுவத்திற்காக தேர்வு செய்யப்பட்டு 45,000 பேர் பயிற்சியில் உள்ளனர். கடற்படையில் 10,523 பேரும், விமானப்படையில் 11,979 பேரும் பயிற்சியில் உள்ளனர்.
பயிற்சிக்காக ரூ. 2409 கோடி
கடந்த 2012ம் ஆண்டிலிருந்து பயிற்சிக்காக அரசு செலவிட்ட தொகை ரூ. 2409.3 கோடியாகும் என்றார் பாரிக்கர்.