டைம்ஸ் நவ் சேனலுக்கு குட் பை.. அர்ணாப்புக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு தொடருமா? #ArnabGoswami
மும்பை: 'டைம்ஸ் நவ்' ஆங்கில செய்திச் சேனல் எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், சமீபத்தில்தான் அவருக்கு பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களிடமிருந்து மிரட்டல் வந்திருந்ததாக, 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தமாக விவாதங்கள் செய்வதன் மூலம், வரவேற்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி வந்தவர் அர்ணாப் கோஸ்வாமி. இவர், பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குறிப்பாக 'நியூஸ் ஹவர்' என்ற பெயரில் தினமும் இரவு 9 மணிக்கு இவர் நடத்தும் விவாத நிகழ்ச்சி வெகு ஃபேமஸ். அந்த தொலைக்காட்சியின் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு செல்ல அந்த விவாத நிகழ்ச்சியே பெருமளவிற்கு உதவி வருகிறது.
இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக, அர்ணாப் கோஸ்வாமி இன்னும் உக்கிரமாகவும், ஆவேசமாகவும் பேசத்தொடங்கினார். எனவே பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத குழுக்கள் அர்ணாப் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
உளவுத்துறை மூலம் இதை அறிந்த மத்திய அரசு அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க சமீபத்தில் முடிவெடுத்தது. தற்போது அர்ணாப் டைம்ஸ் நவ் சேனலிலிருந்து பிரிந்துள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்பு தொடருமா, இல்லையா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.