சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் பணிக்கு திரும்பிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்கு திரும்பினார்.
டெல்லி: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் பணிக்கு திரும்புவார் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி (65) சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சர் பணியிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு மருத்துவ சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு மே 14 ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் ஓய்வில் இருந்து வந்தார்.
அருண் ஜேட்லி நிதி அமைச்சர் பணியிலிருந்து தற்காலிகமாக விடுபட்டதால், நிதி அமைச்சர் பணியை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூடுதலாக கவனித்து வந்தார்.
அதே நேரத்தில், அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா துணை சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்க அருண் ஜேட்லி நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார்.
அருண் ஜேட்லி மருத்துவ சிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்து வந்தாலும் அவர் சமூக ஊடகங்களில் தீவிரமாகவே செயல்பட்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சமூக ஊடகங்களில் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், இன்று குடியரசு தலைவர் அலுவலக வட்டாரம், மருத்துவ சிகிச்சைக்கு சென்ற மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிக்கு திரும்புவார் என்று தெரிவித்துள்ளது.