மோடி அமைச்சரவையில் மாற்றம்? நிதி அமைச்சராக, பியூஷ் கோயல், பாதுகாப்பு அமைச்சராக அருண்ஜேட்லி?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நிதி அமைச்சராக உள்ள அருண்ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், புதிய நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் குறிப்பிடும்படியான பொருளாதார வளர்ச்சி எட்டப்படவில்லை. வரி மற்றும் நில சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு கடுமையாக விமர்சித்து வருகின்றன.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிக்கு அடிப்படையாக இருந்த இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாத நிலை உள்ளது. இதனிடையே பாரதிய ஜனதாவுக்கு அக்னிபரீட்சையாக அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெல்வதன் மூலமே 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு பாஜக இருக்கிறது.
இதனால் தம்முடைய அமைச்சரவையில் பிரதமர் மோடி சில மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் பாஜக தலைவர் பதவியில் தொடர்ந்து அமித்ஷா நீடிக்க வேண்டும்; ஓரிருநாட்களில் நடைபெற உள்ள பாஜக தலைவர் தேர்தலில் எதிர்ப்பாளர்கள் தலை எடுக்காத வகையில் 3 ஆண்டுகாலத்துக்கு அமித்ஷாவே தலைவராக நீடிப்பதை உறுதி செய்துவிட வேண்டும் என்பதில் மோடி முனைப்புடன் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போதைய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை பாதுகாப்புத் துறை அமைச்சராக மாற்றிவிட்டு புதிய நிதி அமைச்சராக பியூஷ் கோயலை கொண்டுவருவது என்பது மோடியின் அடுத்த திட்டம். பொருளாதார மேம்பாடு, வரி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஜேட்லி வெற்றி பெறவில்லை என்பது மோடியின் கருத்தாக உள்ளதாம்.. ஆகையால் அருண்ஜேட்லியை பாதுகாப்புத் துறைக்கு மாற்ற திட்டமாம்.
அருண்ஜேட்லிக்கு பதிலாக மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நிதித்துறை அமைச்சராக விரும்புகிறாராம் மோடி. நிதித்துறையில் நிறைய அனுபவம் பெற்றவர் பியூஷ் கோயல். குஜராத்தில் மின்சார திட்டங்களை செயல்படுத்தியதில் முதல்வராக இருந்த மோடிக்கு ஆலோசகராக செயல்பட்டவர் பியூஷ் கோயல். இதனால்தான் அவர் பிரதமராகவும் முடிந்ததாம்.
பிரதமர் மோடியுடன் தற்போதும் அதிகமாக வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடியவர் கோயல். தேர்தல் மற்றும் அரசியல் அனுபவங்கள் குறைவாக இருந்த போதும் நிதித்துறை சார்ந்த அனுபவங்கள் நிறையவே இருப்பதால் பியூஷ் கோயலை முழுமையாக நிதி அமைச்சராக்குவது என மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கின்றன டெல்லி தகவல்கள்.