தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்காத பட்ஜெட்! மக்கள் ஏமாற்றம்
டெல்லி: பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியொன்றும் நடக்கவில்லை.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தனி நபர் வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்கும் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதுவரை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30 சதவீதமும் தற்போது வரி விதிக்கப்படுகிறது.
நடுத்தர வர்க்கத்து சம்பளக்காரர்களில் பெரும்பாலானோர் ஆண்டுக்கு 2.50 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோர். எனவே ரூ.4 லட்சம் வரையில் வருமாவரியிலிருந்து விலக்கு அளிக்க நிதி அமைச்சகம் பரிசீலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. பாஜக கூட்டணி கட்சியான சிவசேனாவோ 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி விலக்கு தேவை என்ற கோரிக்கையை அளித்தது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்கள்தான் பாஜகவின் வாக்கு வங்கி. எனவே அவர்களை குஷிப்படுத்தி ஆதரவை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி இன்றைய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ஜேட்லி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது என்ற யூகங்கள் பரவின.
குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சத்திற்குள் இந்த மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனி நபர்கள் தங்கள் வருமானத்தில் வரி சலுகைகள் பெற வகை செய்யும் 80சி பிரிவின் கீழ் மேலும் ரூ. 50,000 வரை வரிச் சலுகை பெறும் வகையில் திருத்தம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மட்டும் ஜேட்லி அறிவித்தார். இதனால் நடுத்தரவர்க்கத்து மக்கள் வரி பிடியிலிருந்து தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications