பீகார் தேர்தல் தோல்வியால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லை.... அருண் ஜேட்லி
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி அடைந்ததால் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பின்னடைவு என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தல் முடிவு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளதாவது:
பீகார் தேர்தல் என்பது ஒரு மாநிலத்துக்கான தேர்தல். இதனால் மத்திய அரசு மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளோ நாட்டின் பொருளாதரமோ பாதிக்கப்படப் போவதில்லை. பொருளாதார சீர்திருத்தங்கள் என்பது தொடரவே செய்யும்.
பீகார் தேர்தலை மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கான வாக்கெடுப்பாக கூறுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு தேர்தலும்தான் வாக்கெடுப்பாக இருக்காது.
பீகாரில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்ததால்தான் வென்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சிக்கான வாக்கு சதவீதம் குறைந்து போய்விடவில்லை.
பீகார் மாநிலத்துக்கு பொருளாதார நிதி உதவியை அறிவித்துள்ளோம். அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாகவே இருக்கும்.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications