மறுபடியும் வாய்ச்சண்டையில் குதித்த அருண் ஜேட்லி, சுஷ்மா..!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கு சீட் கொடுக்க மறுத்தது தொடர்பாக பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி இடையே வாய்ச்சண்டை வெடித்துள்ளது.
ஏற்கனவே கர்நாடக பாஜகவில் ஸ்ரீராமுலுவை சேர்ப்பது தொடர்பாக சுஷ்மாவுக்கும், ஜேட்லிக்கும் இடையே சண்டை மூண்டது. இந்த நிலையில் தற்போது ஜஸ்வந்த் சிங் தொடர்பாக சண்டை மூண்டுள்ளது.
ஜஸ்வந்த் சிங்குக்கு சீட் தர மறுத்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சுஷ்மா சுவராஜ், இந்த முடிவை பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் இதற்குப் பதிலளித்த ஜேட்லி, எல்லா முடிவுகளையும் கட்சிதான் எடுக்குமே தவிர மத்திய தேர்தல் கமிட்டி எடுப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.
சுஷ்மா தனது கருத்தின்போது ஜஸ்வந்த் சிங் தொடர்பான முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது. பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங் என்று கூறியிருந்தார்.
சுஷ்மா சுவராஜ் அத்வானி ஆதரவாளர், ஜேட்லி வாஜ்பாய் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்து.