இன்னொரு 1962 யுத்தமா? சீனா வாலாட்டினா பதிலடி ரெடி... அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு வார்னிங்
இடாநகர்: 1962-ம் ஆண்டு போல் இந்தியா-சீனா யுத்தம் நிகழாது; அப்படியும் சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தால் கடும் பதிலடி கிடைக்கும் என அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடுகிறது சீனா. இதனை நமது நாடு மிக கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் கடந்த டிசமப்ர் 9-ந் தேதி சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்தது. 300க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இந்திய பகுதியை ஆக்கிரமிக்க முயன்றனர்.

இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். ராணுவத்தினர் சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட் வீரர்கள் தீரமுடன் போராடி சீன வீரர்களை விரட்டியடித்தனர். இதில் இந்திய வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை; இந்திய வீரர்களுக்கு படுகாயமும் ஏற்படவில்லை என்றார்.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு இந்த ஊடுருவல் தொடர்பாக கூறியதாவது: தற்போதைய எல்லை நிலவரமும் 1962-ம் ஆண்டு யுத்த காலமும் ஒன்றானது அல்ல. 1962-ம் ஆண்டு யுத்த காலத்தில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது.
ஆனால் இப்போது சீனா எல்லை தாண்டி ஊடுருவ முயற்சித்தால் தக்க பதிலடி தரப்படும். அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது ராணுவமும் எல்லையில் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பெமா காண்டு கூறினார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவின் ஊடுருவல் தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 9-ந்தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பிரிவில் நமது எல்லையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த அவையில் விவரிக்க விரும்புகிறேன். 9-ம் தேதியன்று, சீனாவின் பிஎல்ஏ துருப்புக்கள் தவாங் பிரிவின் யாங்ட்சே பகுதியில் உள்ள எல்லைக் கோட்டை மீறி, தன்னிச்சையாக தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். சீன முயற்சியை நமது துருப்புக்கள் மிக உறுதியான முறையில் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மற்றும் கைகலப்பில், பிஎல்ஏ நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்தது. இதனால் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை என்பதை இந்தச் சபையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்திய ராணுவத் தளபதிகளின் சரியான நேரத் தலையீடு காரணமாக, பிஎல்ஏ வீரர்கள் தங்கள் நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர். சம்பவத்தின் தொடர்ச்சியாக, அப்பகுதியில் உள்ள நமது உள்ளூர் தளபதி 11ந்தேதி அன்று எதிர்த் தரப்பினருடன், நிறுவப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க பிரச்சினையை விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்து, எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் நிலைநாட்ட சீனத் தரப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தூதரக வழிமுறைகள் மூலமும் சீனத் தரப்பிடமும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது.
நமது படைகள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளன என்றும், அதன் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் நான் இந்த அவையில் உறுதியளிக்க விரும்புகிறேன். நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான முயற்சிக்கு உறுதுணையாக இந்த முழு அவையும் ஒன்றுபட்டு நிற்கும் என்று நான் நம்புகிறேன். ஜெய் ஹிந்த்! இவ்வாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications