ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்து தாக்குதல்... அருணாச்சல் பிரதேச எம்.எல்.ஏ. மகன் அடித்துக் கொலை

டெல்லியில் நடந்த மிருகத்தனமான செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அருணாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிடோ டேனியம். இவரது தந்தை அருணாச்சல் பிரதேச மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார்.
ஜலந்தரில் தங்கிப் படித்து வந்தார் 20 வயதான டேனியம். புதன்கிழமையன்று இவர் டெல்லிக்கு வந்திருந்தார். பின்னர் லாஜ்பத் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு தனது நண்பருடன் போயிருந்தார். அப்போது நிடோவின் ஹேர்ஸ்டைலைப் பார்த்த கடைக்காரர்கள் சிலர் அவரைக் கிண்டலடித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த நிடோ, கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். தனது தலைமுடியை கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். மேலும் கடையின் கண்ணாடியையும் கோபத்தில் நிடோ உடைத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடைக்காரர் உள்பட 5 பேர் சேர்ந்து நிடோவை சரமாரியாக அடித்துள்ளனர். கம்பி உள்ளிட்டவற்றை வைத்தும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்தார் நிடோ.
அதன் பின்னர் போலீஸார் வந்தனர். அவர்கள் நிடோவை மீட்டனர். பின்னர் கடைக்காரர்களை அமைதிப்படுத்தினர். பின்னர் கண்ணா்டியை உடைத்ததற்காக நிடோவிடமிருந்து பணமும் பெற்று அவரை விடுவித்துள்ளனர் கடைக்காரர்கள்.
இந்த நிலையில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் நிடோ. ஆனால் அவர் அடுத்த நாள் காலையில் பிணமாகக் கிடந்தார். தாக்குதலில் ஏற்பட்ட காயத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி டெல்லி காவல்துறையைக் கண்டித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு டெல்லி போலீஸாரே பொறுப்பேற்க வேண்டும். இது துவேஷத் தாக்குதலாகும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீஸார் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வட கிழக்கு மாநிலங்களில் வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக கருதப்படுவதால் அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications