பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்கள்: மீண்டும் பாயும் கேஜ்ரிவால்
குர்கான்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை பெரும்பான்மையாக ஊடகங்கள் பணம் பெற்றுக் கொண்டு முன்னிறுத்தி வருகின்றன என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
குர்கானில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசியதாவது:
பெரும்பாலான ஊடகங்கள் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமங்களிடம் இருந்து நிதி உதவி பெற்றுக் கொண்டு நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இக்கட்டான சூழலை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில் நாட்டின் யதார்த்த நிலைமை என்ன என்பதைத்தான் ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் ஊழல் நிர்வாக முறையை மாற்றி அமைக்க குர்கானில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் யோகேந்திர யாதவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆம் ஆத்மியினர் தேர்தலில் போட்டியிடுவது என்பது நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான். அடுத்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார்.