டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் நள்ளிரவில் விடுவிப்பு
டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி: ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் மனம் உடைந்து போன முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்க்க சென்று கைதான அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடைபெற்ற இது தொடர்பான போராட்டத்தில் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் தீவிரமாக பங்கேற்றார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனம் உடைந்து போயிருந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உடலை காண சென்ற போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைதான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநகர ஆர்.கே.புரம் காவல்நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இதே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தியும், டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும் கைதாகி விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.