கெஜ்ரிவாலுக்கு “டீ” கொடுத்த மோடி... ஆனால் பதவியேற்பில் பங்கேற்க மாட்டார்!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.15 மணியளவில் கெஜ்ரிவால் டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் மோடி இல்லத்திற்கு சென்றார். அவருடன் துணை முதல்வராக பதவியேற்க இருக்கும் மணிஷ் சிசோடியாவும் உடன் சென்றார்.

அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, தேநீர் விருந்து அளித்தார். தொடர்ந்து அரைமணி நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமரிடம் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று நடைபெறும் முதல்வர் பதவியேற்புக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் எளிய முறையில் பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்துள்ளார். ஆடம்பரம் எதுவும் வேண்டாம் என ஒவ்வொரு செயல்பாட்டிலும் காட்டி வருகிறார்.
மேலும் எவ்வித பகைமைக்கும் இடம் கொடுக்காமல் பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என நேற்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கினையும் சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, "கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மகாராஷ்டிராவில் விழா ஒன்றில் பங்கேற்பதாக ஏற்கனவே பிரதமர் தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதால் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications