அருண் ஜேட்லிக்கு சமூகத்தில் என்ன நல்ல பெயர் இருக்கிறது ? அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி
டெல்லி: மக்களவை தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற அருண் ஜேட்லிக்கு என்ன நற்பெயர் இருக்க முடியும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது மத்திய நிதி அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி, கடந்த 2013-ம் ஆண்டுவரை, சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்தார். அப்போது, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக போலியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இதை அருண் ஜேட்லி மறுத்துள்ளார்.
தன்மீது பொய் குற்றச்சாட்டை கூறி பொது வாழ்க்கையில் தனக்கு இருந்த நற்பெயருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் களங்கம் ஏற்படுத்திவிட்டார் என்று கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் அருண் ஜேட்லி. மேலும், ரூ.10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தன்மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கு பற்றி கருத்து தெரிவித்துள்ள கேஜ்ரிவால், "2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட அருண் ஜேட்லி ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அப்படிப்பட்டவருக்கு பொதுமக்களிடம் என்ன நற்பெயர் இருக்க முடியும்?. தனக்கு சமூகத்தில் நற்பெயர் இருப்பதாக அவர் கூறுவது முற்றிலும் அற்பமானது, ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை" என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.