அமைச்சரின் ஆபாச சிடி.... அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய ஷீலா தீட்சித் வலியுறுத்தல்
டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப்குமார் 2 பெண்களுடன் ஆபாசமாக இருந்த சி.டி. வெளியான சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால் அரசில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சி.டி. வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சந்தீப் குமார் தொடர்பான ஆபாச வீடியோவில் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண் டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து சந்தீப் குமார் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், நாட்டையே கேவலப்படுத்திய இந்த விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.