காதலர் தினத்தன்று ‘டெல்லியின் காதலர்’ கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராவார்... அடேங்கப்பா ஆம் ஆத்மி!
டெல்லி: டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்றும் அக்கட்சியினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
அதை விட முக்கியமாக பிப்ரவரி 14ம் தேதியன்று அவர் முதல்வராக பதவியேற்பார் என்றும் தேதி குறிப்பிட்டுப் பேசியுள்ளார் அத்தலைவர்.

கடந்த 2013ம் ஆண்டு டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். 49 நாட்கள் பதவியில் இருந்த கெஜ்ரிவால், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.
இந்நிலையில், அடுத்த மாதம் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 7ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள், 10ம் தேதி எண்ணப்பட உள்ளன. எனவே, டெல்லியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக, ஆம் ஆத்மி கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி டெல்லி தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் கடும் நேரடிப் போட்டி காணப்படுகிறது. காங்கிரஸ் ஓய்ந்து போய் விட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராக்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். டெல்லியின் காதலரான கெஜ்ரிவால், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி டெல்லி முதல்வராக பதவி ஏற்பார்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications