ஜெ. ஸ்டைலில் மோடி அரசு: நிதித்துறை To சுற்றுலா To சிறுபான்மையினர் நலன்- செயலாளர் மாற்றம்
டெல்லி: மூத்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் மாயாராம் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 15 நாட்களில் இது அவருக்கு 2வது இடமாற்றமாகும்.
முன்னதாக அவர் நிதித்துறையிலிருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது சிறுபான்மையினர் நலத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியானது, சுற்றுலாத்துறை பதவியை விட மிகவும் அதிகாரம் குறைந்ததாகும்.
நேற்று நள்ளிரவில் மாயாராமை சுற்றுலாத்துறையிலிருந்து இடமாற்றம் செய்யும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கொடுமை என்றால், நாளைதான் சுற்றுலாத்துறை செயலாளர் பொறுப்பை ஏற்கவிருந்தார் மாயாராம். ஆனால் அதற்குள்ளாகவே அவருக்கு 2வது இடமாற்றத்தைக் கொடுத்துள்ளது மத்திய அரசு.
மாயாராமை சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் பதவியில் நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்து நேற்று இரவு உத்தரவிட்டது.
இதுவரை சிறுபான்மையினர் நல விவகாரத்துறை செயலாளராக இருந்து வந்த லலித் பன்வார், சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுதவிர இன்னொரு முக்கிய மாற்றமாக, நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications