களத்தில் ஜெட்கள்.. மாறி மாறி தாக்குதல்.. இதுதான் நடக்கிறது இந்திய - பாக். எல்லையில்.. முழு விபரம்!
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாட்டு விமான படைகளும் மாறி மாறி சண்டையிட்டு வருகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாட்டு விமான படைகளும் மாறி மாறி சண்டையிட்டு வருகிறது. காலையில் இருந்து இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். பாகிஸ்தான் விமான படையும், இந்திய விமான படையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத சண்டையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த தாக்குதல்கள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலையில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பின்வரும் சம்பவங்கள்தான் நடந்து இருக்கிறது.
விமானம் வெடித்தது
இந்திய நேரப்படி காலை 11 மணி அளவில் அந்த செய்தி வந்தது. அதன்படி இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -21 விமானம் பயிற்சியின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது என்று கூறப்பட்டது. இதில் இருவர் இறந்துவிட்டனர் என்று கூறப்பட்டது.
பாகிஸ்தான் என்ன சொன்னது
இதையடுத்துதான் பாகிஸ்தான் அந்த அறிவிப்பை வெளியிட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் இரண்டு இந்திய விமானம் வந்ததாக பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம். ஒரு விமானம் இந்திய எல்லையில் விழுந்தது. இன்னொரு விமானம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் விழுந்தது. ஒரு விமானியை கைது செய்துள்ளோம் என்று பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஏ.காஃபூர் தெரிவித்து இருந்தார்.
என்ன குழப்பம்
இதனால் காலையில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானமும், பாகிஸ்தான் தாக்கிய விமானமும் ஒன்றா என்ற சந்தேகம் எழுந்தது. பாகிஸ்தான் தாக்கியதால்தான் இந்த சம்பவம் நடந்ததா என்றும் கேள்விகள் எழுந்தது. என்னதான் எல்லையில் நடக்கிறது என்றும் குழப்பம் ஏற்பட்டது.
மாற்றினார்கள்
அதன்பின் இது தொடர்பான இந்திய தரப்பில் இருந்து புதிய தகவல்கள் வெளியானது. காஷ்மீரில் விழுந்து நொறுங்கியது எம் 17 ரக ஹெலிகாப்டர் என்றனர். மிக் 21 விமானம் விழவில்லை. விழுந்தது ஹெலிகாப்டர். இதில் 4 பேர் பலியானதாகவும் கூறப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று கூறியது.
மறுப்பு தெரிவித்தது
அதோடு இதில் இன்னொரு மறுப்பும் இந்தியா தெரிவித்தது. அதன்படி இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை. பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படங்கள் பழைய படங்கள். இந்தியா விமானங்கள் தாக்கப்படவில்லை. இந்திய விமானி கைது செய்யப்படவில்லை என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது.
இன்னொரு பக்கம் சண்டை
இது போக காலையில் இன்னொரு பக்கம் சண்டை நடந்து இருக்கிறது. அதன்படி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானம் துரத்தி அடிக்கப்பட்டது. இன்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப் -16 போர் விமானங்கள் நுழைந்து இருக்கிறது. 2-3 விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து இருக்கிறது. அதேபோல் காஷ்மீரின் ராஜூரி பகுதியில் அவர்கள் குண்டுகளை எரிந்து இருக்கிறார்கள்.
வெடித்தது
ஆனால் இந்திய விமானப்படை இதை திறமையாக சமாளித்தது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தான் விமானி எங்கே சென்றார் என்ற விவரம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.