ஹிந்தி பட தயாரிப்பாளர், 2ஜி வழக்கின் குற்றவாளி கரிம் மொரானி வீட்டில் துப்பாக்கி சூடு!
மும்பை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பாலிவுட் பட தயாரிப்பாளர் கரிம் மொரானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் பாலிவுட் படத் தயாரிப்பாளர் கரிம் மொரானி. இந்த வழக்கு தொடர்பாக 2011ம் ஆண்டு சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட கரிம் மொரானி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டுள்ளன. கடந்த மாதம் மும்பையில் உள்ள இவரது வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த பரபரப்பு ஓய்வதற்குள் நேற்று மீண்டும் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் ஐந்து ரவுண்டுகள் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அதிருஷ்டவசமாக கரிம் மொரானி உள்பட குடும்பத்தார் அனைவரும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து மும்பை போலீசில் கரிம் மொரானி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தனக்கு நிழலுலக தாதா ரவி பூஜாரியிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும், எஸ்எம்எஸ் மூலமாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications