அஸ்ஸாம் இடைத்தேர்தல்.. மூன்று இடங்களை வென்ற பாஜக.. ஒரு இடத்தை பறிகொடுத்த காங்கிரஸ்
குவகாத்தி: அஸ்ஸாமில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, இடைத்தேர்தல் நடந்த மூன்று சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக தான் வென்று இருந்தது.
அதேநேரம் காங்கிரஸ் கட்சி தன் கைவசம் இருந்த ஒரு தொகுதியை மற்றொரு எதிர்க்கட்சியான ஏஐயூடிஎப் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.
நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்தது. அன்று தான் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தொகுதி இடைத்தேர்தல் நடந்தது.

வாக்கு எண்ணிக்கை
அஸ்ஸாமில் காலியாக இருந்த ராதாபரி, ரங்காபாரா மற்றும் சோனாரி, ஜனியா ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஜனியா தவிர மூன்றுமே பாஜக வசம் இருந்தவை தான். இந்நிலையில் தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

3 இடங்களில் வெற்றி
இதில் பாஜக வேட்பாளர்கள் கரிபாந்த் (ராதாபரி தொகுதி), தபார் கோகாய் (சோனாரி தொகுதியிலும்),. பல்லாப் லோச்சன் தாஸ் (ரங்காபாரா) தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

ஏஐயூடிஎப் வெற்றி
முஸ்லீம் மக்கள் அதிகம் உள்ள ஜனியா தொகுதியான ஜனியா காங்கிரஸ் வசம் இருந்தது. ஆனால் இப்போது நடந்த இடைத்தேர்தலில் ஏஐயூடிஎப் கட்சியின் வேட்பாளர் அப்துல் கலைக்யூவிடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.

காங். பலம் சரிவு
இதில் வெற்றி பெற்றதன் மூலம் 126 உறுப்பினர்கள் உள்ள அஸ்ஸாம் சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 61 ஆகவே மீண்டும் நிலை பெற்றுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் பலம் 25ல் இருந்து 24 ஆக குறைந்துள்ளது. ஏஐடியூஎப்பின் பலம் 13ல் இருந்து 14 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications