இது சினிமாவில் அல்ல.. பிறந்தவுடன் கைமாறிய குழந்தை! தாயின் 3 ஆண்டு பாசபோராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
கவுகாத்தி: அசாமில் மருத்துவமனை ஊழியர்களின் தவறால் பிறந்தவுடன் தாயைவிட்டு பிரிந்த ஆண் குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாயுடன் சேர்ந்து உள்ளது.
அந்த கால திரைப்படங்கள் தொடங்கி தற்போது தெலுங்கில் வெளியான "அல வைகுண்டபுரம்" வரை பல படங்களில் பிறந்த குழந்தைகள் கைமாறுவதை போல் காட்சிகள், கதைகள் இடம்பெற்றிருக்கும்.
இப்படியெல்லாம் உண்மையில் நடக்குமா? என்ற சந்தேகம் அதை பார்த்த பலரும் எழுந்திருக்கும். ஆனால், இது உண்மையாக அசாமில் நடந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஒரே நேரத்தில் பிறந்த குழந்தை
அசாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 2 பெண்கள் பிரசவத்துக்காக ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். ஒருவர் பெயர் நஜ்மா கன்னாம். மற்றொருவர் பெயர் நஜ்மா காட்டுன். இருவருக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு குழந்தை இறந்துவிடுகிறது.

கைமாறிய குழந்தைகள்
நஜ்மா கன்னாம் என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரோடு இருந்தது. ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ அதை மாற்றி வழங்கிவிட்டது. பிரசவத்துக்கு பிறகு குழந்தை உயிரோடு இருந்ததாகவும், நஜ்மா கன்னாமின் உடல்நிலை சரியில்லாததால் அவர் உடனடியாக ஐசியுவுக்கு மாற்றப்பட்டு, பிறந்த குழந்தை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் இறந்த குழந்தையின் பெற்றோரிடம், தன்னிடைய குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

போலீஸ் விசாரணை
குழந்தையை பெற்றுத்தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால் காவல்நிலையத்தில் கன்னாம் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இந்த குழப்பம் நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தாயுடன் சேர்ந்த குழந்தை
இதனையடுத்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதிகோரி மாவட்ட நீதிமன்றத்தில் காவல்நிலைய விசாரணை மனு செய்தார். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் குழந்தையின் டி.என்.ஏ. மாதிரி மற்றும் இருவரது டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 3 ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் நஜ்மா கன்னாமின் குழந்தை என்பது உறுதியானது. இதனையடுத்து 3 வயது ஆண் குழந்தை தனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications