முதன்முறையாக 'நோட்டா'வுக்கு தனிச் சின்னம்.... ஓட்டு எந்திரத்திலேயே இருக்கும்!
டெல்லி: தமிழகம் உட்பட நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், முதன்முறையாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கும் நோட்டா வசதிக்கு புதிய சின்னம் வழங்க இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி.

அப்போது அவர், வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் நோட்டோவுக்கு தனி சின்னம் வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான 'நோட்டா' வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பாளரை நிராகரிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு வசதியாக அதற்குரிய 'நோட்டா' பட்டன் வாக்குப் பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டது.
தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், வாக்காளர்கள் இந்த நோட்டா பட்டனை நாடலாம். இதுவரை நோட்டா பட்டனுக்கென தனி சின்னம் வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது இதற்கு தனிப்பட்ட முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் வாக்காளர்கள் அதனை எளிமையாக அடையாளம் காண இயலும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசியில் இந்த பட்டன் அமையப் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications