சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதியும் ஓய்வு பெற தடை கோரி ஜெ. மனு!

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடக அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணா இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவரும் ஓய்வு பெறாமல் தொடர்ந்து வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கோரியும் மனு ஒன்றை ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் புதிய நீதிபதியை நியமித்தால் வழக்கின் தீர்ப்பு வர தாமதமாகும் என்றும் ஜெயலலிதா தமது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இதேபோல் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications