அரசியலில் என் பயணம் முடியவில்லை! - எல் கே அத்வானி
டெல்லி: அரசியலில் என் பயணம் இன்னும் முடியவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் பிரதமராக முடியவில்லை.
இந்த பொதுத் தேர்தலிலாவது தன் பிரதமர் கனவு நிறைவேறும் என எதிர்ப்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. அவரது எதிர்ப்பையும் மீறி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டார்.

இதனால் கட்சிப் பணிகள், பிரச்சாரங்களில் ஒதுங்கியே இருந்தார் அத்வானி. இந்த நிலையில் நேற்று தனது அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்று, அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் எழுதியிருப்பதாவது:
"கராச்சியில் எனது பதினான்கரை வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தபோது வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியேறிய நான் முதலில் கராச்சியிலும், பிரிவினைக்குப்பின் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராகப் பணிபுரிந்தேன்.
55 ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியபோது எனது வாழ்க்கையின் அர்த்தம் மேலும் மேம்படுத்தப்பட்டது. முதலில் பாரதீய ஜனசங்கத்தில் பணியாற்றினேன். இப்போது பாரதீய ஜனதாவிலும் பணியாற்றி வருகிறேன். என்னுடைய இந்த அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை...," என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்வானி இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், அவர் ராஜ்ய சபை எம்பியாகிவிடுவார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், அடுத்த தேர்தலில் தான் விரும்பும் தொகுதியில் அத்வானி போட்டியிடலாம் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications