பெங்களூரில் காவலாளியை கொன்று ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சி! சிசிடிவியில் காட்சிகள் பதிவு
பெங்களூர்: ஏடிஎம் காவலாளியை கொலை செய்துவிட்டு, ஏடிஎம் மிஷினை உடைக்க மர்ம நபர் முயன்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் மகாதேவபுரா காவல் நிலைய எல்லையிலுள்ள ஈஜிபுரா பகுதியுள்ளது யூனியன் வங்கியின் ஏடிஎம். இங்கு மினாதுல்லா பாரிபா என்ற 25 வயது அசாம் இளைஞர் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 3.10 மணி்யளவில் இவரை தலையில் அடித்து கொலை செய்த கொள்ளை நபர், ஏடிஎம் மிஷினை உடைக்க முயன்றுள்ளார். முயற்சி தோல்வியடைந்ததால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஏடிஎம் முதல் மாடியில் இருப்பதாலும், நேற்று நாள் முழுவதும் வாடிக்கையாளர் யாருமே வரவில்லை. இரவில், ஷிப்ட் மாற்றுவதற்காக வேறு காவலாளி வந்தபோதுதான், பாரிபா கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏடிஎம் மையத்திலுள்ள சிசிடிவி காமிராவில் கொலை சம்பவம் அப்பட்டமாக பதிவாகியுள்ளது. கொலையாளி, முகமூடி ஏதும் போடாமல், மெத்தனமாகவே இந்த காரியத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications