குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்: ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் அமளி
டெல்லி: குஜராத் மாநிலத்தில் தலித் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அடுத்தடுத்து இருமுறை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று காலை ராஜ்யசபா துவங்கியத்தில் இருந்தே காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் குஜராத்தில் உனா பகுதியில் தலித்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேச வேண்டும் என்றும், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அவையின் மத்தியப் பகுதிக்கு சென்று கூச்சல் எழுப்பினர். இதனால் இன்று மதியம் 12 மணி வரை அவையை ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் ஒத்தி வைத்தார். மீண்டும் அவை கூடியதும், எதிர்கட்சியினர் ஒன்று கூடி கூச்சலிட்டனர். இதனையடுத்து அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது இந்த பிரச்சினையை எதிர்கட்சியினர் எழுப்பியும் பிரச்சினை எதுமின்றி அவை நடைபெற்றது.
குஜராத்தில் தலித் இளைஞர்கள் சரமாரியாக தாக்கப்பட்டதை கண்டித்து அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த 11ம் தேதி குஜராத்தின் உணா பகுதியில் பசுந்தோலை கடத்தியதாக கூறி 4 இளைஞர்களை ஒரு கும்பல் கட்டி வைத்து தடியால் தாக்கியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்த தலித் இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வீச்சு சம்பவத்தில் காவலர் ஒருவரும், பூச்சி மருந்து சாப்பிட்ட இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தலித் இயக்கத்தினர் கோண்டல், ஜுனாகட் பகுதியில் முழுஅடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பசு பாதுகாப்பு கும்பலால் தாக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரை இழப்பீடு அறிவித்துள்ளது. இளைஞர்களை தாக்கியது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications