அதிகரிக்கும் ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல்.. உள்துறை அமைச்சருடன் சுஷ்மா அவசர ஆலோசனை
டெல்லி: டெல்லியில் காங்கோ நாட்டு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஹைதராபாத்தில் ஒரு நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலால் ஆப்பிரிக்க நாடுகளில் அதிர்ச்சி அலை பரவியுள்ளது. காங்கோ தலைநகர் கின்ஹாசாவில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்தியர்களின் கடைகள் தாக்கப்பட்டன. இந்தியர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள்.

மேலும் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும் கூட இந்தியாவில் ஆப்பிரிக்கர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அதிர்ச்சியும், கோபமும் வெளிப்படுத்தியிருந்தனர். இதையடுத்து மத்திய அரசு சுதாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, டெல்லியில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட காங்கோ நாட்டு இளைஞர் மசுன்டா ஆலிவரின் உடலை காங்கோவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராஜ்நாத் சிங்குடன் பேசியது குறித்து சுஷ்மா கூறுகையில், நான் ராஜ்நாத் சிங், ஜங் ஆகியோருடன் பேசினேன். ஆலிவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜந்தர் மந்தரில் ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுடப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களைச் சந்தித்து சமாதானப்படுத்துமாறு இணை அமைச்சர் வி.கே.சிங், செயலாளர் அமர் சின்ஹா ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா.












Click it and Unblock the Notifications