பத்து ரூபாய்க்காக பத்திரிகை ஆசிரியர் கைகளை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது
கொச்சி: கூடுதலாக 10 ரூபாய் கொடுக்காத பத்திரிகை ஆசிரியரை ஸ்பேனரால் அடித்து இருகைகளையும் உடைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் முன்னணி நாளிதழில் ஒன்றான 'கேரள கவுமதி' பத்திரிகையின் கொச்சி பதிப்பில் செய்தி ஆசிரியராக பணியாற்றுபவர் லெனின். நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்குபணியை முடித்துவிட்டு சக ஊழியர் பிரவீன்குமார் என்பவருடன் சேர்ந்து பஸ் நிலையம் செல்ல ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். 2 கிலோமீட்டர் தூரத்துக்குள் உள்ள பஸ் நிலையம் செல்ல ரூ.40 வாடகையாக தரும்படி ஆட்டோ டிரைவர் கேட்டுள்ளார். ஆனால் லெனின் 30 ரூபாய்தான் தருவேன் என்று கறாராக கூறிவிட்டார்.
இதையடுத்து. வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்ட டிரைவர் ஆட்டோவில் இருவரையும் ஏற்றியுள்ளார். ஆனால் பயண நேரத்தின்போது, "10 ரூபாய்க்கு கணக்கு பாக்கிறியே சாவு கிராக்கி" என்னும் ரேஞ்சுக்கு திட்டிக்கொண்டே ஆட்டோ ஓட்டியுள்ளார் அதன் டிரைவர். அப்போது லெனினும் டிரைவரை திட்டியுள்ளார். இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சமடைந்த நிலையில், ஆட்டோவை நிறுத்துமாறு லெனின் கூறியுள்ளார். பாதியிலேயே ஆட்டோவை டிரைவர் நிறுத்தியுள்ளார். அதில் இருந்து பிரவீன்குமார் இறங்கிய நிலையில், லெனினை இறக்காமல் ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் அதன் டிரைவர்.
சற்றுதூரம் சென்ற பிறகு ஆட்டோவை நிறுத்திய டிரைவர் நீளமான இரும்பு ஸ்பானரை எடுத்து லெனின் தலையில் தாக்கியுள்ளார். அதை தடுக்க இரு கைகளையும் லெனின் குறுக்கே நீட்டியபோது இரு கைகளிலும் பலத்த அடிபட்டுள்ளது.
வலியால் துடித்த லெனினை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கொச்சி மருத்துவ அறக்கட்டளைமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இரு கைகளிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக கூறிவிட்டனர். இப்போது அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கேரள பத்திரிகையாளர் சங்கத்தினர் பணம் திரட்டி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும், ஆட்டோ டிரைவர்களின் அடாவடிக்கு எதிராக பத்திரிகையாளர்கள் கொச்சியில் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் முரளி என்பவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications