டெல்லியில் அய்யாக்கண்ணு திடீரென மயக்கம்- மருத்துவமனையில் அவசர சிகிச்சை!
விவசாயிகளுக்கான கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வந்த அய்யாக்கண்ணு திடீரென மயக்கமடைந்தார். அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி : டெல்லியில் 23 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் அய்யாக்கண்ணு திடீரென இன்று மயக்கமடைந்தார். இன்று காலை எட்டு மணிக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய போது அய்யாக்கணு மயக்கமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக விவசாயிகள் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளுடன் டெல்லியில் போராடி வருகின்றனர். மீசை, தாடி, தலை முடியை ஒருபக்கமாக மழித்தும், தலைகீழாக நின்று என பல்வேறு நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இன்று காலையில் எட்டு மணியளவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கை, கால்களைக் கட்டிக்கொண்டு சாலையில் உருளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை முன்னின்று நடத்தும் அய்யாக்கண்ணு திடீரென மயக்கமடைந்தார்.
டெல்லியில் நிலவி வரும் அதிக வெப்பத்தாலும், 23 நாட்களாக சரியான உணவும் உறக்கமும் இல்லாத காரணத்தாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 6 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அய்யாக்கண்ணு அதிகமாக சோர்வாக இருந்ததால் மயக்கமடைந்தார்.
ஆனால், அருகில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் உடன் இருந்தவர்களே தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications