அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு - தென்னிந்திய தலைவரானார் அய்யாக்கண்ணு
அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
டெல்லி: வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்தோடு டெல்லி சென்றுள்ள அய்யாக்கண்ணு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளார்
டெல்லியில் உள்ள குருநானக் கோவில் வளாகத்தில் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றனர்.
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நதிநீர் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராடினர்.

விவசாயிகள் போராட்டம்
நாடு முழுவதும் இந்த போராட்டம் கவனத்தை பெற்றது. ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்திற்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழக பந்த்
இதன் எதிரொலியாக தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் நிறைவடையவில்லை.

பல மாநில விவசாயிகள்
இந்த நிலையில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்க 20 விவசாயிகள் கொண்ட குழுவினர் அய்யாக்கண்ணு தலைமையில் சனிக்கிழமையன்று டெல்லி சென்றனர். டெல்லியில் உள்ள குருநானக் கோவில் வளாகத்தில் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்புக்குழு
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 'அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளதை அறிவித்தார். தென் இந்திய தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன் என்று கூறினார்.

நாடு முழுவதும் உறுப்பினர்கள்
இந்த அமைப்பின் வட இந்திய தலைவராக உத்தரபிரதேச மாநில விவசாயிகள் சங்க தலைவர் வி.எம்.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு பிராந்தியங்களுக்கான தலைவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும், 21 செயலாளர்கள் மற்றும் 150 பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம்பெறுவார்கள்.

நாடு தழுவிய போராட்டம்
ஜூன் 9ஆம் தேதி மீண்டும் டெல்லியில் கூடி, மற்ற தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போது, அகில இந்திய அளவில் நடத்தப்போகும் போராட்டம் குறித்தும் அறிவிக்கப்படும் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார். போராட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வெடிக்க உள்ளது என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications