வங்கதேச போர்க்குற்றவாளிக்கு தூக்கு: உஷார் நிலையில் அஸ்ஸாம், மேற்கு வங்கம்
டெல்லி: வங்கதேசத்தில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் மதியுர் ரஹ்மான் நிஸாமி மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் மதியுர் ரஹ்மான் நிஸாமி(71) மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்ட போரில் அவர் பல குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர் மீதான 16 போர்க்குற்றங்களில் 8 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அவரை சாகும் வரை தூக்கிலிட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் மேற்கு வங்கத்தில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினர் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று மத்திய புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது. ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஒரு கிளையான ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பால் பிரச்சனை ஏற்படலாம் என்று புலனாய்வுத் துறை மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில போலீசாரை எச்சரித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் செயல்படும் தங்களின் திட்டங்கள் தகர்க்கப்பட்டுள்ளதால் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பினர் ஏற்கனவே கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த மரண தண்டனை தீர்ப்பால் அவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications