பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிடாமல் பேட்டிக்கு தடை விதிப்பதா?: பிரபலங்கள் கொதிப்பு
மும்பை: பலாத்காரம் செய்த குற்றவாளியை உயிரோடு விட்டு விட்டு அவனது பேட்டியை ஒளிபரப்ப தடை விதிப்பது ஏன் என்று பாஜக அரசுக்கு பாலிவுட் பிரபலங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி, தூக்கு தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முகேஷ் சிங் என்ற குற்றவாளியை பேட்டி கண்டு ஆவணப்படமாக எடுத்துள்ள பி.பி.சி. தொலைக்காட்சி அதை ஒளிபரப்ப முடிவு செய்தது. அதற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி பி.பி.சி. அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பி உள்ளது.
தடையை மீறி, பேட்டியை ஒளிபரப்பிய பி.பி.சி.யை பாஜக விமர்சித்து உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியா தத் கூறும்போது, ''அந்த ஆவணப்படம், பாலியல் பலாத்காரத்தை ஆதரிக்கவில்லை. பலாத்காரம் செய்பவரின் மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. அதற்கு தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது" என்று கூறி உள்ளார்.
இந்நிலையில், இதற்கு, பாலிவுட் சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
|
உடனே தூக்கில் போடுங்க
''பேட்டியை ஒளிபரப்ப தடை விதிப்பது பற்றி உடனடியாக முடிவு எடுத்த மத்திய அரசு, அந்த பாலியல் குற்றவாளியை 3 ஆண்டுகளாக உயிருடன் வைத்திருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டியதுதானே" என்று இயக்குநர் புனித் மல்கோத்ரா கூறியுள்ளார்.
|
தடை விதிப்பது ஏன்?
அமெரிக்க ராணுவத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் பற்றியோ, கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பலாத்காரம் பற்றியோ எடுக்கப்படும் படங்கள் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் நடந்த ஒரு பாலியல் பலாத்காரம் பற்றிய படத்துக்கு தடை விதிக்கப்படுவது ஏன்" என்று நடிகர் சித்தார்த் கேட்டுள்ளார்.

சோனல் சவுகான்
இதேபோல், ''பேட்டி அளித்த அந்த மிருகத்தை தண்டிப்பதற்கு பதிலாக, பேட்டி ஒளிபரப்புவதை தடை விதிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவது கேலிக்கூத்தாக உள்ளது" என்று நடிகை சோனல் சவுகான் கூறியுள்ளார்.
|
ஆண்களின் மனோபாவம்
கருவில் உள்ள பெண் குழந்தையை அழிப்பதில் இருந்து, பெண்களை பலாத்காரம் செய்து கொல்வதுவரை நடக்கிறது. நாளைய ஆண்களை நாங்கள்தான் வளர்த்து வருகிறோம். எனவே, ஆண்களின் மனோபாவம் மாற வேண்டும்" என்று நடிகை டிவிங்கிள் கன்னா கூறியுள்ளார்.
|
உலகமே இருண்டு விடும்
இதுகுறித்து அனுராக் பாசு, ''மத்திய அரசின் தடை நடவடிக்கை, பூனை தனது கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைப்பதுபோல உள்ளது" என்று கூறியுள்ளார்.
|
முகத்தில் விழுந்த அடி
''இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம், ஒவ்வொரு இந்தியனின் முகத்திலும் விழுந்த அடி"' என்று ஹிந்தி திரைப்பட இயக்குநர் அபிஷேக் கபூர் கூறியுள்ளார்.

எழுத்தாளர் சேட்டன் பகத்
இதனிடையே பேட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு நடிகர் ரன்வீர் ஷோரே வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த ஆவணப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எழுத்தாளர் சேட்டன் பகத் கூறியுள்ளார்.
|
அங்கீகரிக்கவேண்டும்
ஆவணப் படங்கள், உண்மையை தெரிவிப்பவை. அந்த உண்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும்" என்று குணச்சித்திர நடிகர் போமன் இரானி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications