பலமுறை பந்தை உதைத்தும் ஒரு கோல் கூட போட முடியாத பாபா ராம்தேவ்!
டெல்லி: டெல்லி மக்களுக்கு நேற்று திடீர் விருந்தாக அமைந்தது பாபா ராம்தேவின் கால்பந்து ஆட்டம். அவர் யோகா செய்த அழகைப் பார்த்து "மிரண்டு"ள்ள மக்களுக்கு கால்பந்து ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ஆச்சரியம் வந்தது.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர் பந்தை உதைத்து விரட்டிய விதம் பலரையும் கலகலக்க வைத்து விட்டது. நேற்று மாலை இந்த கண் கொள்ளாக் காட்சியை மக்கள் டெல்லியில் பார்க்க நேரிட்டது.
எம்.பிக்களுக்கும், நடிகர்களுக்கும் இடையிலான காட்சி கால்பந்துப் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை ராம்தேவ் வந்து தொடங்கி வைத்தார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் அவர் கோல் போட முயற்சித்து கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியாமல் போனது.
பிரதமரின் நலத் திட்டங்களுக்கு
மத்திய அரசு அமல்படுத்தி வரும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றுக்கு நிதி சேகரிப்பதற்காக இந்த கால்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிதியுதவி
இந்த காட்சிப் போட்டியின் மூலம் வசூலான பணத்தை பிரதமரிடம் நேரில் சந்தித்து வழங்கி இந்தத் திட்டங்களுக்கு உதவ திட்டமிட்டு இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.
பாபா
இந்தப் போட்டியை ராம் தேவ் பந்தை உதைத்துத் தொடங்கி வைத்தார். அவர் உதைத்த விதத்தைப் பார்த்து, இவர் மட்டும் இந்திய அணியில் இணைந்திருந்தால் மெஸ்ஸி, மாரடோனா எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள் என்று சிலர் ஜாலியாக கமெண்ட் விட்டனர்.
ரெண்டு பேரும் எனக்கு தேவை
நிகழ்ச்சியின்போது ராம்தேவ் பேசுகையில், நான் யாருக்கும் பாரபட்சம் பார்க்க மாட்டேன். அரசியல்வாதிகள், நடிகர்கள் இருவரையும் ஆதரிக்கிறேன். இருவரும் வெல்ல வேண்டும் என்றார்.
கோலடிக்கப் பார்த்தார்
போட்டியின் தொடக்காக ராம்தேவ் கோலடிக்க முயற்சி செய்தார். பலமுறை பந்தை தட்டி விட்டும் அவரால் கோலடிக்க முடியவில்லை. இருந்தாலும் விடவில்லை, தொடர்ந்து முயற்சித்தார். ஆனால் எல்லாமே விலகி விலகி ஓடியது. பின்னர் முயற்சியை விட்டு விட்டார்.
அபிஷேக் பச்சன்
நடிகர்கள் அணியில் அபிஷேக் பச்சன் கேப்டனாக இருந்தார். அதில் ரன்பீர் கபீல், டினோ மோரியா, ஷபீர் அலுவாலியா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
அடேங்கப்பா ரிசல்ட்
இந்தப் போட்டியில் பாலிவுட் அணி 10-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதாவது அரசியல்வாதிகள் கடைசி வரையிலும் ஒரு கோல் கூட போடவில்லை.. ராம் தேவ் மாதிரியே!