பாபா ராம்தேவ் பேச்சால் தலித் வாக்குகள் 'கோவிந்தா'?.. பீதியில் பாஜக!
லக்னோ: தலித் மக்கள் கடும் கொதிப்பில் உள்ளனர் பாபா ராம்தேவ் பேச்சால். தலித் மக்களின் வீடுகளுக்கு ராகுல் காந்தி ஏதோ தேனிலவுக்குப் போவது போலவும், பிக்னிக் போவது போலவும் போகிறார் என்று அவர் வாய்த் துடுக்காக பேசியதால் தலித்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
இந்தக் கோபம் எல்லாம் அப்படியே பாஜகவுக்கு எதிராக திரும்பும் என்று தெரிகிறது. இதனால் உ.பியில் தான் போட்டு வைத்துள்ள கணக்கு காலியாகுமோ என்ற பயத்தில் பாஜக உறைந்துள்ளது.
ஆனால் தான் தலித் மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசவில்லை என்றும் அப்படிச் சொல்வது அரசியலில் சிலர் பயன்படுத்துவதுதான் என்றும் ராம்தேவ் சால்ஜாப்பு சொல்லியுள்ளார்.
அதேசமயம், ராம்தேவின் பேச்சு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியுமோ அதைச் செய்து விட்டதாக பாஜகவினர் டென்ஷனாக உள்ளனர்.
தலித் வாக்குகள் பறிபோகும்
பாஜகவுக்கு ஆதரவானவர் ராம்தேவ் என்பதால் தலித் மக்களின் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்காது என்று கருதப்படுகிறது. உறுதியாக நம்பப்படுகிறது.
மோடிக்கு தர்மசங்கடம்
மோடியின் தீவிர ஆதரவாளர் ராம்தேவ் என்பதால் அவரது பேச்சு மோடிக்குத்தான் பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.
தேர்தல் ஆணையமும் கண்டனம்
ராம்தேவ் பேச்சால் தலித் சமூகம் மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையமும் கூட ராம்தேவைக் கண்டித்துள்ளது.
ராம்தேவைக் கைது செய்ய மாயாவதி கோரிக்கை
தலித் தலைவரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதியும், ராம்தேவை உடனடியாக கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார.
பாஜகவை முற்றாக ஒதுக்குங்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில் ராம்தேவைக் கைது செய்வதோடு நிற்கக் கூடாது. தேர்தலில் அவர் ஆதரவு தெரிவிக்கும் பாஜகவையும் முற்றிலும் ஓரம் கட்ட வேண்டும்.
அமீத் ஷா டென்ஷனில்
தற்போது உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் மோடியின் வலது கரம் அமீத் ஷா, தலித் பிரிவான வால்மீகி, கதிக், பங்கி ஆகிய பிரிவினரைக் கவரும் வேலையில்தான் ஈடுபட்டுள்ளார். அவரும் தற்போது ராம்தேவின் பேச்சால் டென்ஷனாகியுள்ளாராம்.
மாயாவுக்கு ஆதரவாக மாறும் அபாயம்
ராம்தேவின் பேச்சால் பாஜகவுக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருந்தோர் கூட பின்வாங்குவார்கள். அவர்கள் மாயாவதிக்கு ஆதரவாக திரும்பலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.