பாகிஸ்தான் பிரதமர் பாபர் அசாம்.. 1992 லாஜிக்! உலகக்கோப்பை வென்றால்.. கொளுத்திப்போட்ட சுனில் கவாஸ்கர்
கான்பெரா: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் பிரதமர் ஆவார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சூப்பர் 12 சுற்றுகள், மற்றும் அரையிறுதி சுற்றுகள் நிறைவடைந்து உள்ளன.
இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்ற 12 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே தலா ஒரு போட்டி நடத்தப்பட்டது. 2 குழுக்களிலும் அதிக புள்ளிகளை எடுத்த முதல் 2 அணிகள் என 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட்.. எல்லாம் போச்சே.. நீதிமன்ற பணியை விட்டு பார்த்த வக்கீல்கள் புலம்பல்
இறுதி போட்டியில் பாகிஸ்தான்
நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் குரூப் ஒன்றில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் இரண்டில் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து
2 வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இறுதிப்போட்டி
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து பாகிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறி இருக்கின்றன. இதில் வெற்றிபெறும் அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும். இந்த நிலையில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரைபோல் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
1992 பேட்டர்ன்
கடந்த 1992 ஆம் ஆண்டும் இதே ஆஸ்திரேலியா மண்ணில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதின. அதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அணி வெற்றிபெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.
ரசிகர்கள் ஒப்பீடு
30 ஆண்டுகளுக்கு பிறகு அதே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. குறிப்பாக 1992 உலகக்கோப்பை நிலவரம் மற்றும் முடிவுகளை தற்போதைய உலகக்கோப்பை தொடருடன் ஒப்பிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
சுனில் கவாஸ்கர்
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த ஒப்பீடுகள் சுவாரஸ்யத்தையும், நகைப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நகைச்சுவையாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி இந்த தொடரில் பாகிஸ்தான் வென்றால் பாபர் அசாம் பாகிஸ்தான் பிரதமராக வருவார் என்று தெரிவித்து உள்ளார்.
பிரதமர் பாபர் அசாம்
இந்தியா - இங்கிலாந்து போட்டியின்போது பேசிய அவர், "டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் 26 ஆண்டுகளுக்கு பிறகு 2048 ஆம் ஆண்டில் தற்போதைய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிரதமராக வருவார்." என அவர் பேச மற்ற வர்ணனையாளர்கள் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.