உ.பி. இளம்பெண்கள் பலாத்காரம் செய்து கொலை: சி.பி.ஐ.விசாரணை தேவை -ராகுல்காந்தி
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் கடந்த 27-ந்தேதி திடீரென மாயமானார்கள். 3 நாட்கள் கழித்து இருவரும் அதே ஊரில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது. இதனால் கத்ரா கிராமவாசிகள் கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 2 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் கும்பல் 2 சகோதரிகளையும் பலாத்காரம் செய்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 போலீஸ்காரர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டு பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடையை 5 வது குற்றவாளியையும் கைது செய்துள்ளனர்.
ராகுல்காந்தி ஆறுதல்
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை படான் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ராகுல்காந்தி வருகையால் அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று கத்ரா கிராமத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செல்ல இருந்தார். ஆனால் அவருக்கு கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.