‘வழுக்கை தலைக்காரர்கள்... ’ ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு: வழுக்கை தலைக்காரர்கள் கண்டன பேரணி
சமீபத்தில் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, ‘எதிர்க்கட்சியினர், வழுக்கை தலை உடையவர்களுக்கும் சீப்பு விற்று விடுவார்கள்‘ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
வழுக்கைத் தலைக்காரர்கள் குறித்தான ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜல்காவ் மாவட்டம் அமல்னர் டவுனில் ஏராளமான வழுக்கை தலை உடையவர்கள் கூடினார்கள். ராகுல் காந்தியின் பேச்சு தங்களது மனதை புண்படுத்தி இருப்பதாக கூறிய அவர்கள் பேரணியாகச் சென்று மண்டல துணை அதிகாரி துக்காராமை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுபற்றி பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ‘‘தலையில் வழுக்கை விழுவது இயற்கையான ஒன்று. ஆனால், இதை ராகுல்காந்தி வேடிக்கையாக கூறியுள்ளார். இதனால் எங்களது மனது புண்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தி மனு கொடுத்துள்ளோம்'' என்றார்.