அஸ்ஸாமில் ஆதிவாசிகள் படுகொலை - போடோ தீவிரவாத இயக்கத்தின் மீதான தடை 5 ஆண்டுக்கு நீடிப்பு!
டெல்லி: அஸ்ஸாமில் அப்பாவி ஆதிவாசிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி படுகொலை செய்த போடோ தீவிரவாத இயக்கம் என். டி.எஃப்.பி (எஸ்) மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் 5 ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 74 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து போடோ இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போடோ தீவிரவாத இயக்கத்தின் மீதான தடையை சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
போடோ தீவிரவாத இயக்கங்களுக்கு 2002-ல் முதலில் தடைவிதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது இந்த தடை நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.