கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட மாட்டோம்.. விநியோகஸ்தர் அறிவிப்பு
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிராக ரஜினிகாந்த் பேசியதை அடுத்து அவரது காலா படத்தை வெளியிட விநியோகஸ்தர் மறுத்திருக்கிறார்.
பெங்களூர்: கர்நாடகத்தில் காலா படம் ரிலீஸாகாது என்பது உறுதியாகியுள்ளது. படத்தை திரையிட மாட்டோம் என்று பட விநியோகஸ்தர் கோல்டி நிறுவனத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். தனுஷின் வூண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை கர்நாடகத்தில் வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாட்டாள் நாகராஜ் இந்த எதிர்ப்பை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்துவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் நலன் கருதி காலா படத்தை திரையிடக் கூடாது என்று வர்த்தக சபை முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் காலா படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றுள்ள கோல்டி நிறுவனத்தினரும் படத்தை திரையிட மாட்டோம் என்று கூறி விட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் என்பதால் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளனர்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக சமீப காலத்தில்தான் ரஜினி சற்று ஆணித்தரமாக சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி நதி நீர் பங்கீட்டு அதிகாரங்களை வாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு காவிரி நீரை விவசாயிகளுக்கு திறந்து விட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக மதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்போது காலா படத்தில் கையை வைத்து விட்டனர் கன்னட அமைப்பினரும் கர்நாடக திரையுலகினரும். இறுப்பினும் வழக்கம் போல ரஜினி தரப்பிலிருந்து விரைவில் இவர்களை அணுகி சமரசம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications