பார் உரிமம் அளிக்க லஞ்சம்... நிதியமைச்சர் பதவி விலகக் கோரி கேரளாவில் கடையடைப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மதுபான பார் உரிமம் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நிதியமைச்சர் மணி பதவி விலகக்கோரி பாரதிய ஜனதா சார்பில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கேரளாவில் ஆட்சி செய்து வருகிறது. இதில் கேரள காங்கிரஸ் கட்சி மணி பிரிவின் தலைவர் கே.எம்.மணி நிதியமைச்சராக உள்ளார். அவர், ஹோட்டல்களில் பார் நடத்துவதற்கான உரிமம் வழங்க, 3 கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கேரள பார் உரிமையாளர்கள் சங்க செயல் தலைவர் பிஜூ ரமேஷ் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.எம்.மணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கேரளாவில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால், கேரளா - தமிழ்நாடு இடையே போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications