முல்லை பெரியாறு விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பந்த்!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இன்று கேரளாவில் பந்த் நடத்தப்படுகிறது.
முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த சில வருடங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரள அரசு கூறிவந்தது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அதிரடியாக நேற்று அளித்த தீர்ப்பால் இன்று கேரளாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையை நம்பித்தான் தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயமே உள்ளது. கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து அதிகரிக்க முடியாது என முரண்டு பிடித்ததால் அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் லோதா தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. இதில் 2006ம் வருடம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் உத்தரவிட்டது.
புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்தது.
இந்த உத்தரவு கேரளாவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை போராட்டக்குழு சார்பில் போராட்டம் நடந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து இன்று 8ம் தேதி கேராளவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி சார்பில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழு அறிவித்துள்ள இந்த பந்திற்கு தங்களது கட்சி ஆதரவு அளிக்காது என்று மா.கம்யூ கட்சி அறிவித்துள்ளது. இந்த பிரச்சனைக்கு மா கம்யூ கட்சி தனியாக போராட்டம் நடத்தும் என இடுக்கி மாவட்ட மா கம்யூ செயலாளர் மணி தெரிவித்தார்.
இதுகுறித்து கேரள எதிர்க்ட்சி தலைவர் அச்சுதானந்தன் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு விவகார தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும். இந்த வழக்கில் கேரள தரப்பில் முறையாக வாதிடாததே தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications