தமிழக டென்ஷன்: பெங்களூர்-ஒசூர் பார்டரில் படுத்துவிட்ட பட்டாசு வியாபாரம்
பெங்களூர்: சிவகாசியே இடம் பெயர்ந்து வந்துவிட்டதை போல உள்ளது பெங்களூர்-ஒசூர் தமிழக பார்டர். ஆனாலும் தமிழகத்தின் ஸ்திரமற்ற தன்மையால் அங்குள்ள பட்டாசு கடைகளில் வியாபாரம் படுத்துவிட்டதாக புலம்புகின்றனர் வியாபாரிகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதலே ஆரம்பித்து தீபாவளி வரையிலும் ஒசூருக்கும் பெங்களூருக்கும் நடுவேயுள்ள அத்திபெலே எல்லை பகுதியில் சுமார் 600 பட்டாசு வியாபாரிகள் கடை திறப்பது வாடிக்கை. இதில் 200 கடைகள் மிகவும் பெரியதாகவும், 400 கடைகள் ஓரளவுக்கு பெரியதாகவும் இருக்கும். ஒசூர் மற்றும் அதை சுற்றியுள்ள தாலுகாக்களையும் சேர்த்தால் பட்டாசு கடைகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்.
25 கோடி வியாபாரம்
ஒவ்வொரு தீபாவளி சீசனிலும், இங்கு ரூ.20 முதல் 25 கோடி அளவுக்கு வியாபாரம் நடக்கும். காரணம், பெங்களூர் நகரிலிருந்து அங்கு குவியும் வாடிக்கையாளர்கள்தான்.
பட்டாசு பரிசு
கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள், மெஷின் டூல் தொழிற்சாலைகள் என அடித்தட்டு மக்கள் வேலைபார்க்கும் ஆலைகள் பெங்களூரில் ஏராளமாக உள்ளன. இந்த ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பட்டாசு பாக்ஸ்சுகளை உரிமையாளர்கள் பரிசாக அளிப்பது வழக்கம். ஆலை உரிமையாளர்கள் மொத்தமாக பட்டாசை வாங்க முன்பெல்லாம், சிவகாசி செல்வார்கள். ஆனால் பாதுகாப்பு, அலைச்சல் போன்றவற்றை கருதி, இப்போதெல்லாம், ஒசூர் எல்லையிலேயே வாங்கிவிடுவார்கள். இவர்கள்தான் பட்டாசு கடைக்காரர்களுக்கு முக்கிய இலக்கு.
விலை குறைவு
பெங்களூர் நகருக்குள் உள்ள பட்டாசு கடைகளைவிட, ஒசூர் எல்லையில் பட்டாசு விலை கணிசமாக குறைவு. உதாரணத்துக்கு, ஒசூர் எல்லையில், ரூ.300 விலைக்கு விற்பனையாகும் ராக்கெட் பாக்ஸ் பெங்களூரில் ரூ.700க்கு விற்பனையாகிறது. டபுள் சவுண்ட் வெடி, ஒசூரில் ரூ.225 என்றால், பெங்களூரில் ரூ.500. இப்படியாக அனைத்து பட்டாசுகளுமே பெங்களூரில் விலை அதிகம். எனவே தீபாவளிக்கு 2 வாரங்களுக்கு முன்பிருந்தே பெங்களூர்வாசிகள் ஒசூர் நோக்கி படையெடுப்பார்கள். இதனால் ஒசூர் ரோடு ஞாயிற்றுக்கிழமைகளில் கூட டிராபிக் நெரிசலால் நிரம்பும்.
ஜெயலலிதா எபெக்ட்
ஆனால் இம்முறை சேல்ஸ், டல் அடிப்பதாக அங்கலாய்க்கிறார்கள் ஒசூர் கடை உரிமையாளர்கள். இதற்கு முக்கிய காரணம், ஜெயலலிதா கைதால் ஏற்பட்ட ஸ்திரமற்றதன்மைதான். ஒசூர் சாலையில் உள்ள சிறையில்தான் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தார். அங்குதான் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். எனவே, இதை தாண்டி ஒசூர் செல்ல பல பெங்களூர்வாசிகள் தயக்கம் தெரிவித்து கூடுதல் விலைக்கு உள்ளூரிலேயே பட்டாசு வாங்கிவிட்டனர்.
15 வருட பழக்கம் போச்சு
தமிழக-கர்நாடக பஸ்கள் இயங்குவது அவ்வப்போது தடைபட்டதும் அவர்கள் பீதிக்கு காரணமாகிவிட்டது. இதனால் பட்டாசு கடை உரிமையாளர்கள், போன் செய்தே கஸ்டமர்களை அழைக்கும் நிலை கூட வந்தது. தனியார் நிறுவன மேலாண் இயக்குநரான, பெங்களூர் ராஜாஜிநகரை சேர்ந்த ரவிஷ் கூறுகையில், 15 வருடங்களாக ஒசூர் சென்று பட்டாசு வாங்குவது எங்கள் நிறுவன வழக்கம். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்காக இந்தாண்டு அதை நிறுத்திக்கொண்டேன் என்றார்.
வண்டி ஓடாது
பசவேஸ்வரநகரை சேர்ந்த தொழிலதிபர், நாகராஜ் என்பவர் கூறுகையில், பட்டாசுகளை பெருமளவில் வாங்கும்போது, பட்டாசுக் கடைக்காரர்களே மினி லாரியில் அனுப்பி வைப்பது ஆண்டுதோறும் வழக்கம். இம்முறை, அப்படி லாரிகளை அனுப்ப பட்டாசுக் கடைக்காரர்கள் பயந்துவிட்டதால் நான் அங்கிருந்து வாங்கவில்லை என்றார். ஒசூரில் பட்டாசு வாங்கினால் 40 சதவீதம் வரை லாபம் என்றாலும், பாதுகாப்புக்காகவே போகவில்லை என்கின்றனர்.