இந்தியாவின் புற்றுநோய் தலைநகராக மாறிவரும் பெங்களூர்: ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: எளிதில் பரவாத நோய்களால் இந்தியர்கள் பலியாகும் அபாயம் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் புற்றுநோய் தலைநகராக பெங்களூர் மாறி வருகிறது.
இந்தியாவில் பரவக்கூடிய நோய்களை விட பரவாத நோய்களால் மக்கள் பலியாகும் அபாயம் அதிகம் உள்ளது. பரவாத நோய்களால் மக்கள் இறக்கும் அபாயம் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
1995ம் ஆண்டில் இருந்து 2004ம் ஆண்டு வரையிலான காலத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அபாயம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் நகர்ப்புற ஆண்களுக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது 3 மடங்கும், சர்க்கரை நோய் ஏற்பட்டது நான்கு மடங்கும் அதிகரித்துள்ளது.

இதய நோய்
2012ம் ஆண்டில் இந்தியாவில் அதிகமானோர் இதய நோய்களால் பலியாகியுள்ளனர். 13 சதவீதம் பேர் மூச்சுத் திணறலாலும், 7 சதவீதம் பேர் புற்றுநோயாலும், 2 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் மற்றும் 12 சதவீதம் பேர் பிற பரவாத நோய்களாலும் பலியாகியுள்ளனர்.

பெங்களூர்
இந்தியாவில் குறிப்பாக பெங்களூரில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் மாறி வருவது தான் புற்றுநோய் ஏற்படக் காரணம் என்று ஹெச்சிஜி புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் பி. அஜய்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வசிப்போரில் லட்சத்தில் 81 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பெங்களூரிலோ லட்சத்தில் 126 பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தியாவின் புற்றுநோய் தலைநகரமாக பெங்களூர் மாறி வருகிறது. வாழ்க்கைத்தரம் மாறுவதால் இதய நோய், நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

அமெரிக்கா
1900ம் ஆண்டு வரை அமெரிக்காவில் 10 வகையான நோய்களுக்கு தான் மக்கள் பலியாகினர், அதுவும் பரவாத நோய்களால். சராசரி அமெரிக்கர் 48 வயது வரை வாழ்ந்தார். தற்போது அமெரிக்கர்கள் 79 வயது வரை வாழ்கிறார்கள். அதன் பிறகு மருத்துவ உலகில் மாபெரும் புரட்சிகள் நடந்தது, சுகாதார வசதிகள் மேற்கத்திய நாடுகளில் மேம்பட்டது.

இந்தியா
சுகாதார முறை சரியில்லாத இந்தியாவில் பழைய நோய்களுடன் சேர்த்து புதிதாக வரும் நோய்களையும் சமாளிக்க வேண்டி உள்ளது. இந்தியாவில் பரவக்கூடிய நோய்கள் இன்னும் உள்ளன. 1960ள் வரை பெரியம்மை, பிளேக், மலேரியாவின் ஆதிக்கமும், 1990களில் பரவக்கூடிய நோய்களான காசநோய், வயிற்றுப்போக்கு, நிமோனியோவின் ஆதிக்கமும் இருந்தது. 1998ல் காசநோய், மலேரியா, வயிற்றுப் போக்கு, சுவாச பிரச்சனைகள், எய்ட்ஸ் ஆகியவற்றால் பலர் பலியாகினர். அந்த நோய்களின் தாக்கம் தற்போது குறைந்துள்ளபோதிலும் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் சில காய்ச்சல் வகைகளுடன் போராட வேண்டி உள்ளது.

முதியவர்கள்
இந்தியாவில் வசிக்கும் முதியவர்களுக்கு தான் நோய்கள் அதிக அளவில் ஏற்படும் அபாயம் உள்ளது. முதியவர்களுக்கு பரவக்கூடிய, பரவாத நோய்கள் ஏற்படலாம். உலகின் பிற பகுதிகளைப் போன்று இல்லாமல் இந்தியாவில் இளம் வயதினரை பரவாத நோய்கள் தாக்குகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே இந்தியர்களை இதய நோய் தாக்கி வருகிறது.

மார்பக புற்றுநோய்
இளம் இந்தியர்களை மார்பக புற்றுநோய் அதிக அளவில் தாக்கி வருகிறது. பெங்களூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 45 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்களை மார்பக புற்றுநோய் தாக்கியது. தற்போதோ 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை தாக்குகிறது.

மரணம்
இந்தியாவில் உள்ளவர்களில் 18 சதவீதம் பேர் 40 வயதுக்கு முன்பே அகால மரணம் அடையக்கூடும். ஆனால் இந்த மரணத்தை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. பரவாத நோய்களில் பல நெடுங்காலம் இருப்பாதல் அதன் சிகிச்சைக்கு நிறைய செலவாகிறது. இந்தியாவின் சுகாதார செலவில் 39 சதவீதம் இதய நோய்கள், புற்றுநோய், சுவாசப் பிரச்சனைகள், மனநோய், நரம்பியல் கோளாறு ஆகியவற்றுக்கு ஆகின்றன.

செலவு
புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு தான் அதிகம் செலவாகிறது. தங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது புற்றுநோய் ஏற்பட்டால் அந்த குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகிறது. அதனால் நோயாளிகளின் வருமானத்தை பொருத்தே மருத்துவர்கள் சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.

தடுக்கலாம்
சர்க்கரை நோய், வாதம் ஆகியவற்றில் 80 சதவீதம் தடுக்கக்கூடியது. அதே போன்று புற்றுநோய்களில் 30 முதல் 40 சதவீதம் தடுக்கக்கூடியவை. நோய் வந்தால் அதை குணமாக்குவது எப்படி என்று கவனம் செலுத்துவதை விட அதை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

புகையிலை
புகையிலை பயன்பாடு, மது, உடற்பயிற்சி செய்யாதது, கொழுப்பு அதிகம் உள்ள உணவு, உப்பு, சர்க்கரை, இனிப்பான பானங்கள் ஆகியவை பரவாத நோய்கள் ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன.












Click it and Unblock the Notifications